யாழில் சிறுவர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ் குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் யாழ் நாவாந்துறை பகுதியில் 14 வயது சிறுவன் மேல் 10 பேர் கொண்ட சிறுவர் அணி வாள்வெட்டு மேற்கொண்டது இதில் அச்சிறுவன் காயமடைந்ததுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்புபிரிவினர் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக முறையிடப்பட்ட 10 சிறுவர்களையும் நேற்றைய தினம் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற அதிர்ச்சி செய்தியை பொலிஸார் வெளியிட்டதுடன் அவர்கள் அனைவரும 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் யாழ் நகரப்பகுதி, நாவாந்துறை, அத்தியடி, நல்லூர் பகுதிகளை சேர்ந்தவர்க்ள எனவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள், கைக்கோடாரி என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் இளைஞர்களின் அடாவடி மற்றும் வாள்வெட்டு வள்முறைகள் கட்டுப்பாடு இன்றி நடைபெற்றுவரும் நிலையில் சிறுவர்கள் கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்து குழுவாக இணைந்து இப்படிப்பட்ட வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டமையானது பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கைது நடவடிக்கைகள் யாழ் குற்றத்தடுப்புபிரிவு பதில் பொறுப்பதிகாரி குமாரபேலி தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான விஜயகாந்த், கபில்தாஸ், செனரத்னா, கஜான், போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அனைவரும் இன்றையதினம் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.