துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சி வென்ற கொல்கத்தா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்ட சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள் குவித்தது. கெய்க்வாட் 32 ஓட்டங்கள், உத்தப்பா 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ஓட்டங்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார். நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2ஓட்டங்களில் வெளியேறினார். ஷுப்மான் கில் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர் ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.