தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை 21 ஆம் திகதி நீக்க வேண்டாம் என்று கோரி இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை எழுதியுள்ளது.
அதில் “இந்த நிர்கதியான தருணத்தில், தற்போதைய பயணக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை தடையின்றி மேலும் தொடர வேண்டும் என நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். சில நாட்களுக்கு பயணத்தடையை நீக்குவதன் மூலம், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நிலவியது போன்று பெரிய தொற்றுநோய்க்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்லும். கடந்த மூன்று வாரங்கள் மூடப்பட்டதன் விளைவாக கிடைத்த பலன்களை தியாகம் செய்ய வேண்டி நேரிடும், மேலும் தற்போதைய கட்டுப்பாடான நிலைக்கு மீண்டும் நம்மைத் திருப்பி கொண்டுவர, அதிக நேரம் மற்றும் முயற்சி தேவைப்படும். என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இக் கடிதத்தில் பிரதிகள், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடை எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கி பின்னர் 23ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணி முதல் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே இந்த பயணக்கட்டுப்பாடை நீக்காமல் தொடர்ந்து நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.