ஒபரேஷன் சாகர் ஆரக்ஷா 2 பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய கரையோர காவல் படை கப்பல்களின் கப்டன்கள், இந்நடவடிக்கை குறித்த வினைத்திறன் மேம்பாட்டு மீளாய்வுக்காக 2021 ஜூன் 10ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தபோது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன அவர்களால் சிறப்பாக வரவேற்கப்பட்டிருந்தனர்.
இந்த கப்பல்கள் மூலமாக வழங்கப்பட்டிருந்த ஆதரவினை பாராட்டிய அவர், எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்தினை கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய துரிதமான பதில் நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு விசேட நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
கடல் மாசு நீக்கும் சிறப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்த சமுத்திர பிரஹரி கப்பலின் செயற்பாடுகள் குறித்தும் இந்நடவடிக்கைகளில் தமது வகிபாகம் குறித்தும் இந்திய கடலோர காவல் படையின் கப்டன்கள் இலங்கை கடற்படை தளபதிக்கு எடுத்துக் கூறியிருந்தனர்
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சமூகமளித்திருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள், இந்நடவடிக்கை முழுவதும் இந்திய கப்பல்களின் செயற்பாடுகளுக்கு இதயபூர்வமான ஒத்துழைப்பினை வழங்கிய இலங்கை கடற்படைக்கும் இலங்கை கடற்படை தளபதிக்கும் நன்றியினை தெரிவித்திருந்தார்.
மேலும் பொதுவான கடற்பரப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயற்படுகின்றமையை சுட்டிக்காட்டியிருந்த அவர் மீண்டும் நிகழக்கூடிய செயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதர்களின் செயற்பாடுகளால் ஏற்படும் அனர்த்தங்கள் ஆகியவற்றிற்கு உரிய பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினை அணைப்பதற்காக இலங்கை கடற்படையிடமிருந்து உதவிக்காக கோரிக்கை விடுக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் மே 25ஆம் திகதி முதல் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் இங்கு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையையும் மாசு நீக்கும் செயற்பாடுகளுக்கான உதவிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்ட முடியும்.
எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சிகளில் ஐசிஜி டோனியருடன் இணைந்து இந்திய கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேலும் கடல் மாசு அச்சுறுத்தலை கணிப்பிடும் பணிகளில் மாசினை கட்டுப்படுத்தும் கப்பல்கள் உதவியை வழங்கியிருந்ததுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பூரண வசதிகளை அக்கப்பல்கள் தம் வசம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளினதும் கடல் படைகள் இடையில் காணப்படும் கூட்டுத்திறன் மற்றும் ஒன்றிணைவானது இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கைகளுக்கான சிறந்த சான்றாக அமைகின்றன.
2020 செப்டம்பர் இலங்கை கரைக்கு அப்பால் எம்டி.நியூ டைமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இந்தியக் கடற்படையினதும் இந்திய கடலோர காவல் படையினதும் இவ்வாறான கப்பல்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டுகளில் கடலில் ஏற்பட்ட அனர்த்தங்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின்போது வெற்றிகரமாகவும் துரிதமாகவும் முதலில் பதிலளித்து உதவியினை வழங்கும் நாடாக இந்தியா உள்ளது. பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாட்டிற்கு அமைவாகவும் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையை பிரதிபலிப்பதாகவும் இந்த செயற்பாடுகள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.