நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பின்னர், தமது வீடுகளை விட்டு வெளியேறுவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரச தரப்பினால் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
குறிப்பாக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறையின் பிரகாரமே, வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கின்றமை குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.
வீடுகளை விட்டு வெளியேறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமது தேசிய அடையாளஅட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்படவுள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள், கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றையேனும் கொண்டு செல்வதும் கட்டாயமாக்கப்படும் என அறிய முடிகின்றது.
அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் வெளியில் நடமாடுவதற்கு அனுமதி வழங்காதிருக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. பொருட்களை கொள்வனவு செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அடையாளஅட்டை இலக்கங்களின் பிரகாரம் மாத்திரமே வெளியில் வர முடியும் என கூறப்படுகின்றது.
தேசிய அடையாளஅட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக (1,3,5,7,9) இருக்கும் பட்சத்தில், ஒற்றை இலக்கத்தை கொண்ட திகதிகளில் மாத்திரமே அவர்களினால் வெளியில் வர முடியும்.
அதேபோன்று, தேசிய அடையாளஅட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றின் இறுதி இலக்கம் இரட்டை இலக்கமாக (2,4,6,8,0) இருக்கும் பட்சத்தில், இரட்டை இலக்கத்தை கொண்ட திகதிகளில் மாத்திரமே அவர்களினால் வெளியில் வர முடியும்.
தேசிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், கிராம உத்தியோகத்தரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட ஆவணமொன்றை பெற்றுக்கொள்வது அவசியமாக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர், மக்கள் செயற்படும் விதம் தொடர்பிலான வழிகாட்டி இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.