இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரையோரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடல்கள் கரையொதுங்க ஆரம்பித்துள்ளன.
இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கரை ஒதுங்கிய 6 கடலாமைகள், ஒரு டொல்பின் மீனின் உடல்கள் மீட்கப்ப்ட்டுள்ளன. இதில் குறிப்பாக இலங்கையின் கடலாமைகள் தொடர்பில் பிரசித்தமான இடமாக கருதபப்டும் கொஸ்கொட பகுதியில் மூன்று ஆமைகள் கரையொதுங்கியிருந்தன.
இதுருவ, கொஸ்கொட, வாதுவ, தெஹிவளை மற்றும் பயாகலை கடற் கரைப் பகுதியிலேயே இந்த ஆமைகளும் டொல்பின் மீனும் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்ப்லில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக கடலில் கலந்த பல தொன் நிறைக் கொண்ட இரசாயனங்கள் காரணமாக இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குகின்றனவா என அந்தந்த பகுதிகளின் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக கரை ஒதுங்கிய உயிரினங்களின் மாதிரிகளை பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்துக்கும் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையத்துக்கும் அனுப்பி இரசாயனத் தாக்கம் தொடர்பில் உறுதிப்படுத்த வன ஜீவராசிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே தெற்கின் உனவட்டுன கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை தொடர்பில் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையம் ஊடாக அறிக்கை பெற காலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த பின்னணியில், பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக மருத்துவ பீடம் ஊடாகவும் இது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.