(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் காணொளி மூலம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (4) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியினை பெற்று 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் நிலையில் அவர்களை நேற்று 4 ஆம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (4) திகதி வழக்கை விசாரணைக்காக எடுக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாத காரணத்தினால் காணொளி மூலமாக அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.