சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்-லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரைகுறை ஆடையுடன் ஆன்-லைன் வகுப்புகளை நடத்திய ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி அளிக்கும் புதிய புகார் எழுந்துள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல விளையாட்டு அக்கடமியின் பயிற்சியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அக்கடமியில் தடகள பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு இந்த பயிற்சியாளர் பயிற்சி அளிக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் பயம் காரணமாக புகார் அளிக்கவில்லை.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர் டுவிட்டர் பதிவு போட்டுள்ளார். அதில், 20 பெண்களுக்கு மேல் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.