அண்ணாத்த தவிர்த்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் என் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை என அண்ணாத்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது படக்குழுவினர் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. கொரோனா வைரஸ் காரணமாக பல மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் ஆரம்பித்தனர். படப்பிடிப்பு நடந்தபோது படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட்டு ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
அதன் பிறகு வீடு திரும்பி ஓய்வு எடுத்த ரஜினி, அண்ணாத்த படமே தன் கடைசி படமாக இருந்துவிடுமோ என்று பயமாக இருப்பதாக தன் நண்பர்களிடம் கூறி கண் கலங்கியிருக்கிறார். உடல்நலம் தேறிய பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 32 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. அவர் தொடர்பான காட்சிகளை எல்லாம் படமாக்கிவிட்டனர்.
கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினர் மத்தியில் பேசிய ரஜினி, அண்ணாத்த தவிர்த்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், என் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்குமா, தொடர்ந்து நடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. அண்ணாத்த என் கெரியரின் முக்கியமான படம். அந்த ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று கவலையில் இருந்தேன். படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்தது என்று கூறி கவலையடைந்துள்ளார்.
அண்ணாத்த படத்தை வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியிட முடிவு செய்துள்ளனர். படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் என்று பல நட்சத்திரங்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.