தமிழகத்தில் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் கோரோனா தொற்று தீவிரமாகப் பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 37 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 300 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அரசாங்க மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளின் நிலைமை பரிதாபமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் இலங்கை அகதிகள் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 145 குடும்பங்கள் உள்ளன. இதில், 528 பேர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசித்து வருபவர்களில் கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மட்டும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 32 பேர் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, இந்த அகதிகள் முகாமினை தடை செய்யப்பட்ட பகுதியாக வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த முகாமை சேர்ந்தவர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது,, புதிய நபர்கள் உள்ளே வரவும் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமிற்கு செல்லக்கூடிய பகுதிகள் அடைக்கப்பட்டு, போலீசாரும் நுழைவு பகுதியில் கண்காணிப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.