அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசு விரைவாகக் கையாள வேண்டும். இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ்
குணவர்தனவிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நேரில் வலியுறுத்தினர்.
வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், எஸ்.வினோநோகராதலிங்கம், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி
சார்பில் மனோ கணேசன் மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது, தற்போதைய சூழலில் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை விரைவாகக் கையாள வேண்டும் எனவும்
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் வலியுறுத்தினர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களையும் தமிழ் எம். பிக்கள் ஒப்படைத்தனர்.
இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது உறுதியளித்தார்.