தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை கைது செய்ய முயற்சிக்கப்பட்ட பின்னரும் அவர் வல்வெட்டித்துறையில் நினைவேந்தல் நடத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று சிவாஜிலிங்கம் அஞ்சலி செய்வதற்காக வந்திருந்த நிலையில் அவரை மறித்து பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து யாழ் நகரில் சிவாஜிலிங்கத்தை மறித்த பொலிஸ் அங்கு அவர் வைத்திருந்த பதாகைகளை எடுத்ததுடன் அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். மேலும் அடையாள அட்டை நடைமுறை பின்பற்றாமல் சிவாஜிலிங்கம் வந்திருந்ததாக கூறி பொலிஸார் கைது செய்ய முயன்றனர்.
இதன் போது அடையாள அட்டை நடைமுறை பின்பற்றப்படாமல் வந்த சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெற்றுள்ள பொலிஸார் தேவையேற்படின் தாம் அழைப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் தான் நீதிமன்றம் சென்று வந்ததாகவும் கூறினார். அத்தோடு நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்காக பொலிஸார் இவ்வாறு செய்கின்றதாகவும் தான் இன்று மாலை இந்த நினைவேந்தல் நிகழ்வை தனது அலுவலகத்தில் செய்ய உள்ளதாகவும் கூறி சென்றார். கூறியதற்கிணங்க கெடுபிடிகளுக்கு மத்தியில் வல்வெட்டித்துறையில் உள்ள தனது வீட்டிலும் சிவாஜிலிங்கம் நினைவேந்தல் நடத்தியிருக்கின்றார்.