கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளை செவ்வாய்க்கிழமை காலை சபையில் அறிவிக்கவுள்ளார்.
அத்துடன்,நாளை செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மூன்று நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனதலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்வரும் 19ஆம், 20ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்தார்.
கொவிட் 19 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதற்கமைய 19 ஆம் திகதி விவாதம் முற்பகல் 10.00 மணி முதல் 5.30 மணிவரையும்,20ஆம் திகதி விவாதம் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 வரையும் நடத்தப்படவுள்ளது.