1997 ஜுன் 9.
ஊடகப்பரப்பில் ஒரு உன்னத வானொலியாய்,பிரித்தானியதேசத்தில் உதயமாகிய ஐபிசி தமிழ் வானொலி, இன்று 25 ஆண்டுகளை பெருமையோடு தொட்டு நிற்கிறது.
திரு. தாசீசியஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அதன்பின் பலரது அயராத, அர்ப்பணிப்பான சேவையினால் இன்று உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் மனதைக்கவர்ந்து, ஏராளமான நேயர் சொந்தங்களின் நன்மதிப்பை வென்று நிற்கிறது.
புலம்பெயர்ந்து பிரித்தானியா, ஐரோப்பாவில் வாழும் மக்களுக்காக மட்டுமன்றி கனடா அவுஸ்திரேலியா என உலகமெங்கும் வாழும் தமிழர்களை தயக்கத்தோடு இணைக்கும் அளப்பரிய பணியை ஐபிசி தமிழ் செவ்வனே ஆற்றுவந்திருக்கிறது. தாயகத்தில் போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் ஐபிசி தமிழ் ஆற்றிய பணி இன்றும் மக்கள் மனதில் ஐபிசி தமிழுக்கான தனித்துவத்துக்கு மிக முக்கிய காரணமாகும்.
மக்களின் நலன்களை பேணும் செயற்பாடுகளில் முற்று முழுதாகவே தன்னை அர்ப்பணித்த ஊடகமாக அன்று இயங்கிய ibc தமிழ் வானொலி இன்றும் அதன் கொள்கைகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறது .
பலரது அயராத,அர்ப்பணிப்பான சேவையினால் இன்று உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் மனதைக்கவர்ந்து, ஏராளமான நேயர் சொந்தங்களின் நன்மதிப்பை வென்று நிற்கிறது. லண்டனை தாய்க் கலையகமாகக் கொண்டு தமிழ் மணம் பரப்பி வந்த ஐபிசி தமிழ் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்கள் நிறுவனத் தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தாயகத்திலும் தனது வேரை ஊன்றியது. புலம்பெயர் தேசம் + தாயக அறிவிப்பாளர்கள் ஒன்று சேர செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள், போட்டி நிகழ்ச்சிகள், ஊர் நினைவுகளை சுமந்துவரும் நிகழ்ச்சிகள், மன ஆற்றுகைக்கான களங்கள் முதல் அரசியல் நிகழ்ச்சிகளிலும் தன் தடத்தை வெகுவாகப் பதித்து வெற்றிநடை போட்டு வருகிறது.
“எடுத்த காரியம் யாவினும் வெற்றி “என்ற மகுட வாசகத்தைத்தாங்கி ஆரம்பிக்கும்போது உண்மையிலேயே ஒரு உத்வேகம் மனதில் எழும். அந்த வாசகத்தை செயல் வடிவிலும் இன்று நிரூபித்து நிற்கிறது ஐபிசி தமிழ்.
எங்கு இடர் வந்தபோதும் அங்கெல்லாம் கரம்கொடுத்து உடன் உதவும் பண்பைக்கொண்டிருப்பது இதன் அதிசிறப்பு.
ஒரு ஊடகமானது எவ்வாறு மக்களுக்கு சேவையாற்றவேண்டுமென்பதற்கு IBC தமிழ் சிறந்த முன்னுதாரணம் எனலாம்.
குறிப்பாக தாயகத்தில் அனர்த்த நிலைகள் ஏற்பட்ட போதெல்லாம் புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து
பல அத்தியாவசிய சேவைகளை செய்திருக்கின்றது .
ஐபிசி தமிழின் நீண்ட நெடிய பயணத்தில் பல நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளத்தக்கது. அந்த வகையில் ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரான திரு.கந்தையா பாஸ்கரன் அவர்களின் தூர நோக்கு சிந்தனையை செவ்வனவே வழிநடத்தும் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. நிராஜ்டேவிட் அவர்களும் மிகப்பெரும் பலம். இவர்களோடு குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி திரு. தினா கரு அவர்களும் இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. தியாகராஜன் ராஜன் அவர்களும் ஆற்றும் பணி அளப்பரியது.
வானொலிப்பணிப்பாளர் திரு.சத்தியமூர்த்தி சதீஷ் அவர்களின் வழிநடத்தலில் வானொலி முகாமையாளர் திருமதி.துவாரகி விசாரதனுடன் உதவி முகாமையாளர் செல்வி.கயல்விழி கொலின் பாஸ்கரன், லண்டன் மற்றும் தாயகம் என இணைந்து பணியாற்றும் அனைத்து அறிவிப்பாளர்கள் மற்றும் உடனடி செய்திகளை தரும் செய்திப்பிரிவு, விளம்பரப்பிரிவு, தொழிநுட்ப பிரிவு உட்பட வானொலி சார்ந்து பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் இதன் வெற்றிக்குக் காரணர்கள்.
25 அல்ல இன்னும் பல்லாண்டுகள் தமிழர்கள் அனைவருக்கும் தன்னிகரில்லா சேவையைத்தொடர்ந்தும் வழங்குவதோடு எம்முயிர்த்தமிழையும் பண்பாட்டையும் கலைகளையும் வளர்த்தெடுக்குமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
வெற்றி வரலாற்றைப்படைக்க ஆதாரமான எம் அனைத்து உறவுகளையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைவில் கொள்கிறோம்.