தற்போதுள்ள நெருக்கடி நிலையில், சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்வதை விட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதே அவசியம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது,
இந்த வருடத்திற்கான முதலாவது தேர்தல் பெறுபேறு வௌியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சந்தைக்கு சென்றிருந்தார். வழமையாக செல்வதைப் போலவே அன்றும் சென்றிருந்தார். அன்றைய தினம் சந்தைக்கு சென்ற சுசில் பிரேமஜயந்தவிடம், அரசாங்கத்தின் நிலை என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர் பதில் வழங்கியுள்ளார். லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றை பெற்றுக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சிக்சர் ஒன்றை அடித்துவிட்டு சென்றுள்ளார். சம்பவம் நடந்து 24 மணித்தியாலத்திற்குள், உடன் அமுலாகும் வகையில் அவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு, நான் கூறியதைப் போல முதலாவது தேர்தல் பெறுபேறு வௌியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் அமைச்சர்களை பதவி நீக்குவதை அரசாங்கத்தால் தவிர்க்க முடியாது போகும் என தான் நினைப்பதாகவும் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டால், அரசாங்கத்தினுள் ஏற்படவுள்ள பிளவை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட விவசாயிகளுக்கு துன்பங்கள் இழைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், தற்போதுள்ள அரசாங்கம் விவசாயிகளை மிரட்டி கழுத்தை நெறித்து எழும்ப முடியாதளவிற்கு துன்பப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.