ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் மாவனெல்லையில் கைதுசெய்யப்பட்ட 24 வயது யுவதி, பயங்கரவாத தடுப்பு பிரிவில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சஹ்ரான் ஹாஸிமினால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளில் 15 பெண்கள் பங்கேற்றிருந்தாக அந்தப் பெண் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஐவர் சாய்ந்தமருது தாக்குதலில் மரணித்தனர். 3 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளதுடன், கடைசியாக கைது செய்யப்பட்ட யுவதி உள்ளிட்ட 7 பெண்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்பில் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தம்முடன் பயிற்சிபெற்ற மேலும் 14 பெண்களும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த தயார் என உறுதிபூண்டிருந்ததாக யுவதி தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சஹரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும் 6 பெண்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 20.02.2021 அன்று கைது செய்யப்பட்டவர் மாவனெல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இளைஞர்களினதும் சகோதாரி என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.